27 செப்டம்பர் 2015

மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். 

* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.

* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக் கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

* காஃபி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்… என்பது போன்றவை.

* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

* சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.

* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் ‘மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது’ என்று சொல்லப் பழகுங்கள்.

* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

* எளிமையாக வாழுங்கள்.

* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.

* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.

* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்கு வசப்படும்.

- தமிழ் ஓசை களஞ்சியம்

இரத்த அழுத்தம்

இன்று உலக மக்களில் 65 சதவீதம் பேருக்கு மேல் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் நாம் சந்திக்கும் நபர்களில் இருவருக்காவது இரத்த அழுத்த நோயின் பாதிப்பு இருக்கிறது.
இந்த இரத்த அழுத்த நோய் எவ்வாறு தோன்றுகிறது. இதற்கு காரணமென்ன, இதனை தடுக்க முடியுமா அல்லது முழுமையாக குணப்படுத்த முடியுமா என நம் மனதில் பல கேள்விகள் எழும்.
இரத்த அழுத்தம் என்றால் என்ன
உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான உணவும் பிராண வாயும் எப்பொழுதும் கிடைக்கச் செய்யவும், அந்த திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேறச் செய்யவும் ஒரு அமைப்பு நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. இந்த அமைப்புதான் இரத்த ஓட்டம் என்பது. இந்த இரத்த ஓட்டம் ஒருவித அழுத்தத்தினால்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்குத்தான் இரத்த அழுத்தம் என்று (Blood pressure) பெயர் .
உயர் இரத்த அழுத்தம் உண்டாவதற்கான காரணங்கள்
உயர் இரத்த அழுத்தத்திற்கு எந்தக் காரணமும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அதற்கு முதல் நிலை உயர் இரத்த அழுத்தம் (Essential hypertension) என்று பெயர். இதில் பரம்பரை மரபு அணுகோளாறும் அடங்கும். மற்ற காரணங்களால் உண்டாகும் உயர் ரத்த அழுத்தத்திற்கு இரண்டாவது நிலை உயர் இரத்த அழுத்தம் (Secondary hypertension) என்று பெயர்.
95 சதவீத உயர் இரத்த அழுத்தம் உள்ளவார்களுக்கு ஹார்மோன்களின் அளவு மாறுதல், சிறுநீரகக் கோளாறுகள், இரத்தம் சிறுநீரகத்துக்குக் குறைவாகச் செல்லுதல், இருதய தமணி சுருங்குதல், கர்ப்பத்தடை மாத்திரை உட்கொள்ளுதல் வேண்டாத தீய பழக்கங்கள் (உ.ம்) புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
கவலை, பதற்றம், பயம், மன இறுக்கம் போன்றவைகளால் இரத்த அழுத்தம் கூடலாம். அதிகமாக உப்பு (Sodium salt) உட்கொள்வதால் அதிகமான உப்பு இரத்தத்தில் கலக்கிறது. இதனால் இரத்தம் அதன் அடர்த்தி நிலையைக் குறைக்க உடலில் உள்ள நீரை அதிகமாக எடுத்துக்கொண்டு சிறுநீரகம் மூலமாக அதை வெளியே தள்ள முனைகிறது. இதனால் இரத்த அழுத்தம் கூடுகிறது.
நவீன காலத்தில் டின்னில் அடைத்த உணவுகளும், திடீர் உணவுகளும் (fast food) மிகவும் சாதாரணமாகி, விட்டது. இதனால் பெரும்பாலானோருக்கு இளம் வயதிலேயே அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டு விடுகிறது. காரணம் இதில் ருசிக்காக சேர்க்கப்படும் அதிகளவு கொழுப்புப் பொருட்களும், அஜினமோட்டோ என்ற வினோதமான உப்பும்தான். இந்த உப்பு கலந்த உணவை சாப்பிடுபவர்களிடம் ஒரு தீராத விருப்பத்தை (fast food) உண்டுபண்ணிவிடும். மேலும் இதனால் நீண்ட நேரம் உணவின் சுவை கெடாமல் பாதுகாக்க முடியும். ஆனால் உடலுக்கு மிகவும் தீங்கு செய்யும்.
உடல் எடை கூடக்கூட உயர் இரத்த அழுத்தம் வரும் வாய்ப்பும் கூடுகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ள சுமார் 50% பேர் ஒன்று அளவுக்கு மீறி எடையுள்ளவர்களாகவோ அல்லது இரத்தத்தில் உயர் கொழுப்புத் தன்மை உடையவர்களாகவோ இருக்கின்றனர் என்று கண்டறிந்துள்ளனர்.
அடுத்ததாக, வயது ஆக ஆக இரத்த நாள தமணிகளின் சுருங்கி விரியும் தன்மை (addiction) குறைகிறது. இது 45-60 வயது காலகட்டத்தில் மிகவும் அதிகமாகி, அதிக இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலும் இரத்தத் தமணிகளின் உட்சுவரின் குறுக்களவு குறைவதால் ஏற்படுகிறது. இது ஏன் குறைகிறது. இதற்கு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ள கொழுப்புப் பொருட்கள் வேதியியல் மாற்றம் அடைந்து மற்ற பல கொழுப்புப் பொருட்களுடனும், இரத்தத்தை உறையவைக்கும் பிற இரத்தப் பொருட்களுடனும் (elasticity) சேர்ந்து இரத்தத் தமணியின் உட்சுவரின் நோய்வாய்ப்பட்ட திசுக்களுக்கு இடையே மெல்ல மெல்ல படிந்து விடுகிறது. இதற்கு ஃஈஃ கொலஸ்ட்ரால் மிகவும் உதவுகிறது. இதனால் இரத்த நாளக் குறுக்களவு குறைகிறது. இதற்கு ஆங்கிலத்தில் ‘ஆத்திரோமா’ (Atheroma) என்று பெயர். எந்த அளவுக்கு இது தமணியின் உட்சுவரில் படிகிறதோ அந்த அளவுக்கு அதன் குறுக்களவு குறைந்து இரத்த அழுத்தம் கூடுகிறது. இந்த இரத்த அழுத்தத்தால் மிக மிக சிறு தந்துகிகளின் இரத்த நாளச் சுவர்களின் குறுக்களவு குறைந்து இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் உணவுப் பொருட்களும் பிராண வாயுவும் திசுக்களுக்குச் சென்று அடைய முடியாமல் அழிய ஆரம்பித்துவிடுகிறது. இது சிறுநீரகத்தில் ஏற்பட்டால் சிறுநீரக திசுக்கள் அழிகிறது. இதுவே மூளையில் ஏற்பட்டால் மூளை செயலிழப்பு (Stroke) உண்டாகிறது. இதுவே இருதய திசுக்களில் ஏற்பட்டால் மாரடைப்பு ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம்தான் எல்லா நோய்களுக்கும் மூலகாரணமாக அமைகிறது.
உடற்பயிற்சி :-
அதிகாலை நடைப்பயிற்சி (45 நிமிடம் முதல் 60 நிமிடம் வரை), சிறிது உடற்பயிற்சி செய்துவர வேண்டும். யோகாசனம் செய்வது மிகவும் சிறந்தது. இது மன அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது.
நாள்தோறும் உடற்பயிற்சி செய்தால் சுமார் 10 மி.மி. அளவு உயர் இரத்த அழுத்தம் குறையும் என்று கண்டுபிடித்துள்ளனர். நடைப்பயிற்சி மூச்சு இறைக்க இறைக்க நடக்கக்கூடாது. நடக்கும்பாது நடையில் மட்டும்தான் கவனம் வைக்க வேண்டும். நடக்கும்பொழுது பாதம் முழுவதும் ஒரே சீராக அழுத்தப்பட வேண்டும். காலை வெயிலுக்கு முன்பு நடப்பது நல்லது.
இரத்த அழுத்த நோயைத் தடுக்க...
இரத்த அழுத்தத்தை தடுக்க உடலுக்கும், மனதிற்கும் போதிய பயிற்சி தேவை. இவை இரண்டும் சீராக இருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் வராமல் தடுக்கும்.
உணவுக் கட்டுப்பாடு:-
எளிதில் சீரணமாகக்கூடிய உணவை மட்டுமே உண்ண வேண்டும். வயிறு புடைக்க உண்பதைத் தவிர்ப்பது நல்லது. முதலில் உண்ட உணவு செரிக்கும் முன்பே அடுத்தவேளை உணவு அருந்துவதும், நீண்ட பட்டினி கிடப்பதும் இரத்த அழுத்தத்திற்கு காரணமாக அமையும். எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. மாமிச கொழுப்பு வகைகளை அறவே நீக்க வேண்டும். புளிப்புப் பண்டங்கள், மசாலாப் பொருட்கள், காபி, டீ, அதிக உப்பு, அசைவ உணவுகள், பருப்பு வகைகள் வாயுவைப் பெருக்கும் உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். உணவில் அதிகளவு கீரைகள், பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குப்பைக்கீரை, முருங்கைக் கீரை, சிறுகீரை போன்றவற்றை சாப்பிடவேண்டும். கறி வேப்பிலையை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. காலை உணவை காண்டிப்பாக சாப்பிட வேண்டும். சிற்றுண்டியாக இருத்தல் நல்லது. உணவை நன்றாக மென்று சாப்பிடவேண்டும். உணவு அருந்திய உடனே தூங்கச் செல்லக்கூடாது. பகல் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அதிக நேரம் கண்விழித்திருப்பது தவறு.
தொடர் சிற்றின்பத்தில் ஈடுபடுவதும், சதா எந்நேரமும் காம சிந்தனையுடன் இருப்பதையும் குறைத்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தத்தை உண்டாக்கும் கோபம், எரிச்சல், தீரா சிந்தனை, போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புகை பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். மது அருந்துதல் கூடாது.
இப்படி சிறு சிறு விஷயங்களில் நம்மை மாற்றிக்கொண்டால் இரத்த அழுத்தம் மட்டுமல்ல நீரிழிவு நோயிலிருந்துகூட நம்மை காத்துக் கொள்ளலாம்.

26 செப்டம்பர் 2015

தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உடற்கூறு..! நீண்ட நாள் வாழ்வது எப்படி?

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை). இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் கூடும்!
எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும். இது ஒரு பாங்கில் பணம் சேமிப்பது போல. பாங்கிலுள்ள பணத்தை விரைவில் செலவழித்தால் என்ன ஆகுமோ அதைப் போலத் தான் உயிர் வாழும் ஆண்டுகளும்.
இந்தத் தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''கோயில்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம். சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருந்ததாக அல்லது இருப்பதாகச் சொல்வர். 64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும். 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும். 72,000 ஆணிகள் நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும்.
திருமூலர் தனது பாடலில்:-
விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே
விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.
ஆனால் வரவு 7200 சுவாசம் தான். பாக்கி 14,400. இது தான் நம் மொத்த ஆயுளிலிருந்து கழிந்து கொண்டே வரும். இதைத் தடுக்க மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்தால் ஆயுள் விருத்தியாகும்.
ஒரு சுவையான கணக்கைப் பாருங்கள். ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.
ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்
18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை
(இது சித்தர்களால் மட்டுமே முடியும்)
ஆமை ஒரு நிமிடத்திற்கு மூன்று முறை தான் சுவாசிக்கிறதாம். ஆயினும் அதற்குப் புற பத்துகள் அதிகம்.
ஒரு மனிதன் ஓம்காரம் சொன்னால் அவனுடய சுவாசத்தின் நீளம் குறைந்து சுவாசம் மிச்சப் படுகிறதாம். ஆகையால் பிரணவ மந்திர (ஓம்) ரகசியம் அறிந்தவர்களும் நீண்ட நாள் வாழலாம்.

சளி

படித்த தகவல் ....
பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது.
*
மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள்.
*
கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள்.
*
ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு தூங்குங்கள்.
*
நீங்கள் உறங்கிய பிறகு, உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறி விடும்.
*
பிறகு மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள் !

* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும்
* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும்.
* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.

நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இயங்கிட..!

•தலையை பின்புறம் 10 முறையும் முன்புறம் 10 முறையும் சாய்க்கவும்.
•தலையை நன்றாக பின்நோக்கி வைத்துக் கொண்டு, வாயை நன்றாகத்திறந்து அசைத்து மூடவும்.
•தலையை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு திருப்பவும்.
•பிறகு தலையை வலது தோள்பட்டை வரை கொண்டு சென்று மறுபடி இடது தோள்பட்டைக்கு கொண்டு செல்லவும். இது போல் 10 முதல் 20 தடவை செய்யவும்.
•வா‌ய்‌க்கு‌ள் கா‌ற்றை ‌நிர‌ப்ப‌ி மூடவு‌ம். ‌பி‌ன்ன‌ர் கா‌ற்றை வெ‌ளியே‌ற்றவு‌ம். இதுபோ‌ல் 10 முறை செ‌ய்யவு‌ம்.
•க‌ண்களை வ‌ட்டமாக சு‌ற்‌றி‌ப் பா‌ர்‌க்கவு‌ம். இதுபோ‌ல் ஒரு 2 ‌நி‌மிட‌ம் செ‌ய்யவு‌ம்.
•கழுத்தை நேராக இருக்குமாறு வைத்து தரையில் உட்கார்ந்து கழுத்தை கொஞ்சம்-கொஞ்சமாக சாய்க்கவும். அதே போன்று மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு கழுத்தை மேலே உயர்த்தவும்.
•இரு புருவங்களுக்கும் மேலே ஒற்றை விரல்களால் சில நிமிடங்கள் வரை அழுத்திக் கொண்டேயிருந்து விடவும்.
•கண்களைச் சுற்றி சுருக்கங்கள் விழுவதால் வெகு சீக்கிரம் வயதாகி விட்டது போன்று தோற்றம் ஏற்படும். கீழ்க்கண்ட பயிற்சியின் மூலம் கருப்பு வளையங்கள் நீங்க வாய்ப்புள்ளது.
•முதலில் நேராகப் பார்த்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையைத் தூக்கி மேலே பார்த்து, பிறகு கீழே பார்க்கவும். இதே போன்று வலப்புறமும், இடப்புறமும் பார்க்கவும்.
•விரல்களின் அடிப்புறத்தால் முகம் முழுக்க மெதுவாக அழுத்தினால் முகத்தில் உள்ள தளர்ச்சி நீங்கும்.

இருமலை போக்கும் மஞ்சள், மிளகு, பால்

விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு.
* குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.
* இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.
* பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித் தொழிக்கும் ஆற்றல் பெற்றது.
* அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.
* மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமல், சளி சரியாகி விடும்.

ஆரோக்கியத்தைத் தரும் கம்பு கூழ்

அக்காலத்தில் எல்லாம் காலை உணவாக தானியங்களைத் தான் அதிகம் உட்கொண்டு வந்தார்கள். அதனால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் எவ்வித நோயும் தாக்காமல் ஆரோக்கியமாக இருந்தனர். எனவே நீங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், காலையில் தானியங்களை சேர்த்து வாருங்கள். அதிலும் தானியங்களில் ஒன்றான கம்புவை கூழ் செய்து குடித்து வருவது, உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது, சத்தானது.
இங்கு அந்த கம்பு கூழ் எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
கம்பு மாவு - 1 கப்
சாதம் ஊற வைத்த தண்ணீர் - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
மோர் - 1 கப்
சாதம் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சாதம் ஊற வைத்த நீரில் கம்பு மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கரைத்து, 6-8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்ரை அடுப்பில் வைத்து, அதில் கரைத்து வைத்துள்ள கம்பு நீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அடிப்பிடிக்காமல் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
அப்படி கிளறும் போது கலவையானது களி போன்று வரும் போது, அதனை இறக்கி வேறு பாத்திரத்தில் போட்டு நன்கு குளிர வைக்க வேண்டும்.
இறுதியில் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், மோர் மற்றம் சாதம் சேர்த்து நன்கு கரைத்தால், கம்பு கூழ் ரெடி!!!
குறிப்பு:
இதனை மண் பாத்திரத்தில் கரைத்து குடித்தால், இதன் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

12 செப்டம்பர் 2015

பாசிப்பயறு - நன்மைகள் !

     
  பாசிப்பயறுக்குப் பயத்தம் பருப்பு பாசிப்பருப்பு என்ற பெயர்களும் மக்கள் வழக்கில் உள்ளன. இது ஒரு வகைப் பருப்பு ஆகும். தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இப்பயிர் இங்கேயே பெரிதும் பயிரிடப்படுகிறது. தமிழர் சமையலிலும் இது முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. கொழுக்கட்டை உள்ளிட்ட உண் பொருள்கள் இந்தப் பயற்றைப் பயன்படுத்தியே செய்யப்படுகின்றன. முளைக்க வைத்தும் சமைக்கப்படுவதுண்டு. கஞ்சியிலும் இது சேர்க்கப்படுவதுண்டு. தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் இந்தப் பருப்பைக் கொண்டு செய்யப்படும் பாசிப்பருப்புப் பாயசம் மிகவும் புகழ் பெற்றது.
  பயறு என்பது தமிழில் காணப்படும் பொதுப்பெயராகும். இதில் பச்சைப்பயறு என்றும் தட்டைப்பயறு என்றும் இரு வேறு பயறுகள் உள்ளன. நமது அன்றாட உணவில் புரதம் நிறைந்த ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் உணவு வகைகளில் பயறு சிறப்பான இடத்தைப் பிடிப்பதாகும். இதில் புரதச்சத்து மிகுந்துள்ளது. இப்பயறுகள் ஊன் உணவிற்கு இணையானவை. எனவே, அவற்றை உண்பது உடலுக்கு அதிகப் புரதம் கிடைத்திடச் செய்யும்.
  தொன்று தொட்டு ஊன் உணவு உண்ணாதவர்களால் பயறுகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற தாவரங்களைவிட இவை சத்துக்கள் கூடுதலாகவும் குறைந்த ஈரப்பதம் உள்ளனவாகவும் காணப்படுகின்றன. எனவே, இவற்றை எளிதாகப் பல நாள்கள் பாதுகாப்பாக வைத்திருக்க இயலும். இப்பயறுகள் உலர்ந்து விதைகளாக மாறுவதற்கு முன்னரும் உண்ண உகந்தவை. ஆனால், நன்கு முதிர்ந்த பயறு வகைகளில்தான் அதிகச் சத்துக்களும் குறைவான ஈரப்பதமும் காணப்படுகின்றன. புன்செய் நிலங்களில் விளையக் கூடிய தானியங்களில் சிறந்த உணவுச் சத்துள்ளது பயறு என்றால் அது மிகையல்ல. முதிராத காய்களில் புரதம் குறைவாகவும், வைட்டமின், மாவுச்சத்து ஆகியவை அதிகமாகவும் காணப்படும். ஆனால் முதிர்ந்த பயறு வகைகளில் 20-28 சதவிகிதம் புரதச்சத்தும் 60 சதவிகிதம் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்தும் காணப்படுகின்றன. அதிலும் சோயா பயற்றில் 48 சதவிகிதம் புரதமும், 30 சதவிகிதம் மாவுச்சத்தும் காணப்படுகின்றன. இது பயறு வகைகளிலேயே அதிகமாகும்.
  பயறுகளும், தானியங்களும் பல மருத்துவக் குணங்கள் கொண்டவை. பயறு வகைகளில் அமினோ புளிமங்களும் குறிப்பாக லைசின் மிக அதிக அளவுகளில் காணப்படுகின்றன. ஆனால், தானியங்களில் லைசின் குறைவாகவே இடம் பெற்றிருக்கின்றது. பயறு வகைகளில் அதிகமாக வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் ரிபோபிளேவின் அதிகம் அடங்கியுள்ளது. எனவே, பயறு வகைகள் வைட்டமின் பி பற்றாக்குறையைத் தவிர்த்திடும். பச்சைப் பயறு மற்றும் தட்டைப்பயற்றில் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. அதை அப்படியே பயன்படுத்துவதைவிட, முளைக்கட்டி பயன்படுத்துவதன் மூலம் நல்ல பயன் கிடைக்கும். முளைக்கட்டிய பயற்றில் வாயுத்தன்மையை உண்டு செய்யும் தன்மை கிடையாது. எளிதில் செரிமானமும் ஆகும். பயறுகள் முளைவிடும் தறுவாயில் அஸ்கார்பிக் அமிலமான வைட்டமின் சி அதிகம் காணப்படுகின்றது. முளைக்கட்டிய பயறுகளில் பிற வைட்டமின்களும் கூடுதலாகக் காணப்படுகின்றன. இவை முளை வளர வளரக் கூடிக்கொண்டே போகிறது. முளைக்கட்டிய பயிற்றை அப்படியே பச்சையாகவே சாப்பிடலாம். பச்சை வாசனை பிடிக்காதவர்கள் ஆவியில் 5 நிமிடம் வேக வைத்து பின்னர் வெல்லம் அல்லது சர்க்கரை இட்டும் சாப்பிடலாம். வெந்த பயிற்றைக் கூட்டு, பொரியல் ஆகியவற்றிலும் சேர்த்து உண்ணலாம்.
  புன்செய் நிலங்களில் விளையக்கூடிய தானியங்களில் சிறந்த உணவுச் சத்துள்ளது பயறு. சிறந்த புஷ்டியும், பலமும் தரும். இது சீக்கிரம் செரிமானமாவதும் வயிற்றில் வாயுவை அதிகமாக உண்டாக்காமல் இருப்பதும் தான் காரணம். அறுவடையாகி ஆறு மாதங்கள் வரை தானிய சுபாவத்தை ஒட்டிப் புது தானியத்தின் குணத்தைக் காட்டும்.
  கபத்தைச் சற்று அதிகமாக உண்டாக்கக் கூடும். ஆறு மாதங்களுக்கு மேற்பட்டு அது மிகவும் சிறந்த உணவாகிறது. ஓராண்டிற்குப் பின் அதன் வீரியம் குறைய ஆரம்பிக்கும். தோல் நீக்கி லேசாக வறுத்து உபயோகிக்க மிக எளிதில் செரிமானமாகக் கூடியது.
  பயறு பல வகைப்படும். பாசிப்பயறு, நரிப் பயறு, காராமணி, தட்டைப் பயறு, பயற்றங்காய், மொச்சைப் பயறு ஆகியவை. இவற்றில் நரிப் பயறு மருந்தாகப் பயன்படக்கூடியது. தட்டைப் பயறும், காராமணியும் பயறு என்றபெயரில் குறிப்பிடப்படுபவையாயினும் வேற்றினத்தைச் சேர்ந்தவை. தட்டைப்பயறு இனத்தைச் சார்ந்த பயற்றங்காய் நல்ல ருசியான காய்.
  பச்சைப் பயறு இரண்டு விதமாகப் பயிரிடப்படுகின்றன. புஞ்சைத் தானியமாகப் புஞ்சைக் காடுகளில் விளைவது ஒருவகை. நஞ்சை நிலங்களில் நெல் விளைந்த பின் ஓய்வு நாள்களில் விளைச்சல் பெறுவது ஒருவகை. புஞ்சைத் தானியமாக விளைவது நல்ல பசுமையுடனிருக்கும். மற்றது கறுத்தும், வெளுத்த பசுமை நிறத்திலும், சாம்பல் நிறத்துடனும் காணப்படும். இரண்டும் சற்றேறக்குறைய ஒரே குணமுள்ளவைதாம்.
  பயறு துவர்ப்புடன் கூடிய இனிப்புச் சுவையும், சீத வீரியமுள்ளதுமாகும். நல்ல ருசி உடையது. பசியைத் தூண்டி எளிதில் செரிமானமாகக் கூடியது. இரத்தத்தில் தெளிவை ஏற்படுத்திக் கொதிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் மலம் அதிகமாகத் தங்காமல் வெளியேறிவிடும். ஆகவே இரத்தம் கெட்டு நோய்கள் ஏற்படுவதை இது குணப்படுத்தும். சிறுநீர் தேவையான அளவில் பெருகவும், வெளியேறவும் இது உதவும். கபமோ, பித்தமோ அதிகமாகாமல் உடலை ஒரே சீராகப் பாதுகாக்கும்.
  பயற்றம் பருப்பை வேக வைத்த தண்ணீரை உப்பும், காரமும் சேர்த்து நோயுற்றபின் மெலிந்து பலக்குறையுள்ளவர்கள் சாப்பிடக் களைப்பு நீங்கிப் பலம் உண்டாகும்.
  பச்சைப் பயிரை வேக வைத்து கடுகு, சின்ன வெங்காயம், தாளித்து உப்பு சேர்த்து சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள கூட்டாகவும் உபயோகிக்கலாம். இது மிகவும் சத்தானது.
( இனிய திசைகள் – சமுதாய மேம்பாட்டு இதழ் - மே 2015 )

சர்க்கரை நோயா ? இனி கவலை வேண்டாம் !


-    வெங்கட்ராவ் பாலு B.A., -

  இன்றைய நாகரிக உலகில் நிறைய பேருக்கு சர்க்கரை இரத்த அழுத்த நோய் என்பது சகஜமானதாக இருக்கிறது. இவர்கள் அதிலிருந்து மீள உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

  சர்க்கரை இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட கலோரி அளவு கொண்ட உணவினை சாப்பிட வேண்டுமென உணவு நிபுணர்கள் நிர்ணயித்துக் கொடுத்திருக்கிறார்கள். இந்த சரிவிகித உணவினை சர்க்கரை அழுத்த நோய் உள்ளவர்கள் மட்டுமல்லாது குடும்பத்திலுள்ள மற்றவர்களும் கூட உண்ணலாம். அதனால் ஆரோக்கியமான வாழ்வு வாழ ஏதுவாகிறது.


  சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சரிவிகித உணவைச் சாப்பிடாமல் மட்டும் போதாது. நேரம் தவறாமல் சாப்பிடுவது மிகவும் முக்கியம். இவர்கள் ஒரே சமயத்தில் நிறைய உணவைச் சாப்பிடாமல் இரண்டு மூன்று மணிக்கு ஒரு தரம் காய்கறி சூப், மோர் போன்ற பானங்களை பருகுவதால் உடலுக்குத் தேவையான சக்தி கிடைப்பதுடன் சர்க்கரையின் அளவும் அதிகமாகாமல் தடுத்துக் கொள்ளலாம்.


  சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்க சில வழிகள் : தினமும் காலையில் எழுந்தவுடன் நிறைய சுத்தமான தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் இரண்டு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வரலாம். மேலும் வேப்பிகைக் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தாலும் ஆரம்ப நிலையிலுள்ள சர்க்கரை நோய் குணமாகும். சர்க்கரை நோயாளிகள் நார்ச்சத்து மிகுதியாக உள்ள வெண்டைக்காய், கீரை வகைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி சோற்றுக்கு பதிலாக கோதுமை, கம்பு, கேழ்வரகு ரொட்டிகளை சாப்பிடுவது நல்லது. எண்ணெய் குறைவாக சேர்க்க வேண்டும்.


  நடப்பது என்பது சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு மிகத் தேவையான விஷயமாகும். தினசரி காலை நேரங்களில் வேகமாக நடக்கும் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். காலையில் நேரம் கிடைக்காதவர்கள் மாலையில் நடைப்பயிற்சியை செய்யலாம். சாப்பிட்டவுடன் உட்காரவோ, உடனே தூங்கவோ கூடாது. ஒரு பத்து நிமிடமாவது நடந்துவிட்டு, பிறகுதான் தூங்கச் செல்ல வேண்டும். இதனால் உடலில் சர்க்கரை அதிகமாகும் அளவு குறைக்கப்படும்.


சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு வகைகள் :

  உடலில் உள்ள கணையச் சுரப்பியில் இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்படுவதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சர்க்கரை நோயில் இரண்டு வகை உண்டு.


1.உடலில் இன்சுலின் உற்பத்தி அறவே இல்லாமல் போய் ஆயுள் முழுவதும் இன்சுலின் போட்டுக் கொள்ள வேண்டிய நிலை. இந்த முதல்வகை சர்க்கரை நோய்க்கு ஐடிடிஎம் (Insulin Dependent Diabetes Melitus) என்று பெயர். இந்த வகை சர்க்கரை நோயாளிகள் ஆயுள் முழுவதும் இன்சுலின் ஊசி மருந்து போட்டுக் கொள்ள வேண்டியிருக்கும். இந்த வகை சர்க்கரை நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரக் கூடியது.


2. உடலில் இன்சுலின் உற்பத்தி போதிய அளவுக்கு உற்பத்தி ஆகாததால் ஏற்படுவது இரண்டாவது வகை சர்க்கரை நோயாகும். இந்த வகை சர்க்கரை நோய்க்கு என்ஐடிடிஎம் (Non Insulin Dependent Diabetes Melitus) என்று பெயர். இந்த வகை சர்க்கரை நோயாளிகள் ஆயுள் முழுதும் மாத்திரை சாப்பிட வேண்டியிருக்கும்.


  இந்தியாவில் இரண்டாவது வகை சர்க்கரை நோய் காரணமாக பாதிக்கப்படுவோர்தான் அதிகம். உடல் பருமன், உடல் உழைப்பு இன்மை முறையற்ற உணவு பழக்கவழக்கங்கள் காரணமாக இந்த வகை சர்க்கரை நோய் ஏற்படுகிறது.



  சர்க்கரை நோய் வந்து விட்டால், ரத்த சர்க்கரை அளவைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் சிகிச்சையில் உணவுக் கட்டுப்பாடு முக்கியமான பங்கை வகிக்கிறது. சர்க்கரை நோய் சிகிச்சையை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.


1.உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி

2.உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகள்

3. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் இன்சுலின் ஊசி மருந்து என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.


உணவுக் கட்டுப்பாடு தரும் பயன்


  ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரிய வந்தவுடன் பயப்படத் தேவையில்லை. சாப்பிட்டு ஒன்றரை மணி கழித்து எடுக்கப்படும் இரத்தத்தில் இரத்த சர்க்கரை அளவு 180 மில்லி கிராமுக்கு கீழ் இருக்கும் நிலையில் உணவுக் கட்டுப்பாடு மற்றும் தினசரி உடற்பயிற்சி போதுமானது. மாத்திரை தேவையில்லை. ஆக 20 சதவிகித சர்க்கரை நோயாளிகள் மாத்திரைகளின் தேவையின்றி உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலமே இரத்த சர்க்கரை அளவை நல்ல கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். இவ்வாறு ஒரு நோயாளி உணவுக்கட்டுப்பாட்டில் தொடர்ந்து விரும்பி அக்கறை செலுத்தினால் சர்க்கரை நோய் காரணமாக உடலில் ஏற்படும் விளைவுகளை தடுக்க முடியும். ஏனெனில் கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய் காரணமாக இதயம், சிறுநீரகங்கள், கண்கள், பாதங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


  உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி முதலில் உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரிப்பது அவசியம். ஒவ்வொருவருக்கும் உயரத்துக்கு ஏற்ற எடை இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள குத்துமதிப்பான கணக்கு ஒன்று உள்ளது.


  அதாவது உங்களது உயர அளவிலிருந்து 100-ஐக் கழிக்க வரும் எண்ணே உங்களது சரியான எடை அளவு. உதாரணமாக 170 செ.மீ உயரம் இருந்தால், அவரது எடை 70 கிலோ கிராம்தான் இருக்க வேண்டும். அவரே சர்க்கரை நோயாளியாக இருந்தால் உடல் எடை 10 சதவிகிதம் குறைவாக இருப்பது நல்லது. அதாவது 63 கிலோ கிராம் இருந்தால் நல்லது. சர்க்கரை நோயாளிகள் சமச் சீரான உணவில் தினமும் கவனம் செலுத்துவது அவசியம். புரதம், கார்போ ஹைட்ரேட், குறைந்த அளவு கொழுப்பு, வைட்டமின்கள் ஆகியவை போதுமான அளவுக்கு தினமும் உணவில் சேருவதே சமச்சீரான உணவு என சொல்லப்படுகிறது.
தானிய வகைகள்


  கோதுமை, கேழ்வரகு, கம்பு போன்ற தானிய வகைகள் அரிசியை விட நல்லது. கோதுமையில் புரதச் சத்து அதிகம். மேலும் இத்தானிய வகைகளில் கூடுதல் நார்ச்சத்தை கார்போ ஹைட்ரேட் கொண்டுள்ளதால் உணவு மெதுவாக ஜீரணம் ஆகும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.


அரிசி
  சர்க்கரை நோயாளிகள் அரிசியே சாப்பிடாமல் கோதுமையால் செய்யப்பட்ட உணவுதான் சாப்பிட வேண்டும் என்ற கருத்து தவறானதாகும். அரிசி, கோதுமை, கேழ்வரகு ஆகிய அனைத்திலும் 70 சதவிகித மாவுச் சத்து அடங்கியுள்ளது. எனவே எந்த தானியமாக இருந்தாலும் சரியான அளவில் சாப்பிடுவது என்பது அவசியமாகும்.


பருப்பு வகைகள்
  உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மைசூர் பருப்பு ஆகியவற்றிலும் பயறு வகைகளிலும் புரதச் சத்து 
அதிகம். 25 கிராம் பருப்பில் 100 கிராம் கலோரி கிடைக்கும். 100 கிலோ கலோரியில் கார்போ ஹைட்ரேட் 15 சதவிகிதம், புரதச்சத்து 6 சதவிகிதம் இருக்கும். கொழுப்புச் சத்து 1 கிராம் மட்டுமே இருக்கும். எனவே பருப்புகளை சமைத்தோ, முளை கட்டிய பயறு வகைகளையோ தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.


காளான்

  காளான்களில் புரதச் சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் உள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு காளான் மிகவும் ஏற்ற உணவாகும்.


காய்கறிகள்

  சர்க்கரை நோயாளிகளின் தினசரி உணவில் மிக முக்கியமான இடம் காய்கறிகளுக்கு உண்டு. ஏனெனில் குறைந்த கலோரியில் அதிக ஆற்றலை பெரும்பாலான காய்கறிகள் தரக் கூடியவை.

மோர்

  ஆடை நீக்கிய மோர், சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை மற்றும் தக்காளி ஜுஸ், தெளிந்த சூப், மிளகு ரசம், தக்காளி, வெள்ளரிக்காய், வெங்காயம், வெள்ளை முள்ளங்கி, குடை மிளகாய் ஆகிய காய்கறி சாலட் வகைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.

  சர்க்கரை நோயாளிகள் அளவோடு சாப்பிட வேண்டிய காய்கறிகள் : கேரட், பீட்ரூட், பட்டாணி, டபுள் 
பீன்ஸ் ஆகியவை.


தவிர்க்க வேண்டியவை

  உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சேப்பங் கிழங்கு, வள்ளிக்கிழங்கு ஆகியவற்றை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. சர்க்கரை தேன், குளுக்கோஸ், ஜாம், வெல்லம், இனிப்பு வகைகள், பிஸ்கட்டுகள், கேக், இளநீர், தேங்காய், குளிர்பானங்கள், மதுபான வகைகள், ஹார்லிக்ஸ், பூஸ்ட், போர்ன்விட்டா, காம்ப்ளான் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அனைத்து வகையான பிஸ்கட்டுகளையும் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

நன்றி : நர்கிஸ் – ஆகஸ்ட் 2015

அவரைக்காய்

இயற்கையுடன் இணைந்து வாழும் மனிதன் தன் இருப்பிடத்தைச் சுற்றி அதாவது வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்தான். அதில் தமக்குத் தேவையான செடி, கொடி, மரங்களை நட்டு வைத்தான். அதிலிருந்து கிடைக்கும் பூ, இலை, காய், கனி அனைத்தையும் உண்டான். தன்னை வளர்த்து ஆளாக்கிய மனிதன் என்ற எஜமானுக்கு இவை நீண்ட ஆயுளை நன்றிக்கடனாக கொடுத்து வந்தன.
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால சூழ்நிலைக்கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிடவேண்டும், அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். அதன்படி வீட்டைச் சுற்றி மனிதனுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தரும் கீரைகள், மரங்களை நட்டு வளர்த்தனர். ஆனால் இன்று வீடுகளைச் சுற்றி காங்கிரீட் தளங்கள், குரோட்டன்ஸ் என்று சொல்லப்படும் எதற்கும் உதவாத நச்சுச் செடிகள், அல்லது பிளாஸ்டிக் அலங்காரப் பொருட்கள்தான் உள்ளன. இதனால் வீட்டுத் தோட்டக் காய்கள் எதுவென்று நம் எதிர்கால சந்ததியினர்களுக்குத் தெரியாமல் போகும் நிலை உள்ளது.
இன்று காய்கறிகள், கனிகள் கீரைகள் எல்லாம் இரசாயன உரமிட்டு வளர்க்கப்பட்டு சந்தைகளில் விற்கப்படுகிறது. அவை சில நேரங்களில் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது.
ஆனால் இவைகளை நம் ஒவ்வொரு வீட்டிலும் வீட்டுக் கழிவுகளை உரமாக இட்டு வளர்த்தால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.
அந்த வகையில் வீடுகளில் எளிதாக வளர்க்கப்படும் அவரைக்காய் பற்றி தெரிந்து கொள்வோம்.
அவரை கொடி வகையைச் சேர்ந்தது. குறிப்பாக தென்னிந்தியாவில் வீடுகள்தோறும் பயிரிடப்படும் செடியாகும். இன்றும் கிராமப்புறங்களில் வீட்டின் கொல்லைப் புறத்தில் அவரை பயிரிடப் படுவதைக் காணலாம். ஆடி மாதம் விதை விதைத்தால் அதன் பயன் தை மாதத்தில்தான் கிடைக்கும். இது கொடியாக வளர்ந்து காய் காய்ப்பதற்கு ஆறு-மாத காலமாகும். இந்த அவரைக் கொடிக்கு அழகான பந்தல் போடுவார்கள். அந்த பந்தலின் மேல் இந்த கொடி படர்ந்து காணப்படும். அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது.
அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.
நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.
காமச்சிந்தனை, அதீத சிந்தனை, கோபம், எரிச்சல், இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.

பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் பிஞ்சு வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.
அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
அதுபோல் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை மட்டுப்படும்.
· மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும்.
· மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
· சிறுநீரைப் பெருக்கும்
· சளி, இருமலைப் போக்கும்
· உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்
· சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும்
· இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.
முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.
முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும்.

நரம்பை பலப்படுத்தும் இஞ்சி

திருக்குர்ஆன் மருத்துவம்
                நரம்பை பலப்படுத்தும் இஞ்சி!!!
                      டாக்டர் எம்.ஏ. ஹாருன்.

  “ ( இஞ்சி கலந்த) ஸன்ஜபீல் என்னும் (மிக்க உயர்ந்ததொரு) பானமும் அங்கு அவர்களுக்குப் புகட்டப்படும்.” (அல்குர்ஆன் 76:17)

  இஞ்சி சாப்பிட்டால் இதயநோய் வராது !

  இஞ்சி மலைப் பிரதேசங்களில் அதிக மழை அளவு உள்ள இடங்களில் வளர்கிறது. தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. இஞ்சி வளர்வதற்கு மிதவெப்பமும், அதிககாற்று, ஈரத்தன்மையும் அவசியம். சாதாரணமாக 450 மீட்டர் முதல் 1800 மீட்டர் உயரத்தில் வளர்கிறது. வருடம் 150 செ.மீ மழைபொழியும் மலைப்பிரதேசங்களில் இஞ்சி சிறந்து வளர்கிறது.

  இஞ்சியிலிருந்து தயார் செய்யப்படும் காம்ஃபின், ஜின்ஜிபெரி, ஃபெளளாட்ரின் ஆகிய மருந்து பொருள்கள் உடலுக்கு தெம்பையும், புத்துணர்ச்சியும் தரக்கூடியவை. இது இஞ்சியிலிருந்துதான் தயார் செய்யப்படுகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

  இப்போது உலகப் புகழ் பெற்ற டாக்டர்களும், மருத்துவ பல்கலைக்கழகங்களும் இஞ்சியின் மருத்துவத்தைப் பற்றி புரிந்து கொண்டுள்ளன.

  இஞ்சியின் மருத்துவ குணங்களை அறிந்து தினமும் இஞ்சி சாப்பிட்டால் என்னென்ன நோய் விலகும் என்பதை ஆராய்ந்து நிரூபித்துக் காட்டியுள்ளன.

  நரம்பை பலப்படுத்தும் இஞ்சி

  இதயநோய் வராது
தலைசுற்றல் வாந்தி மயக்கம் ஏற்படாது
இதயத்தை பலப்படுத்தும்
பக்கவாதம், மாரடைப்பு ஏற்பட காரணமான ரத்த கட்டிகள் ஏற்படுவதை தடுக்கும்.
வலிப்பு நோயை குணப்படுத்தும் எனப் புகழ் பெற்ற டென்மார்க் ஓடன்ஸ் பல்கலைக்கழகம் சமீபத்தில் தனது ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளது.

  சமீபத்தில் இந்த பல்கலைக்கழக மருத்துவமனையில் 35 இதய நோயாளிகளுக்கு சோதனை ரீதியில் இஞ்சி மருந்து தினமும் கொடுக்கப்பட்டது. மூன்றே மாதத்தில் ஆச்சரியப்படும் வகையில் அந்த நோயாளிகள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர்.

  காது நோய் ஏற்படாமல் தடுக்க இஞ்சி பொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என இந்த பல்கலைக்கழகம் ஏற்கனவே நிரூபித்துள்ளது.

  மயக்கம், தலைசுற்றல் நோய்களுக்காக கொடுக்கப்படும் ஆங்கில மருந்து ‘டிரம்மைன்’ ஆகும். இந்த மருந்தைவிட இஞ்சிப் பொடி நல்ல பலனைத் தருகிறது என பிர்காம் பல்கலைக்கழகம் 1982 –ம் ஆண்டில் கண்டுபிடித்தது.

  இதயத்துக்கு இஞ்சி நல்லது என ஜப்பான் டாக்டர்கள் ஏற்கனவே கண்டுபிடித்து நிரூபித்துள்ளனர். இதயத்துடிப்பை குறைக்க விலை உயர்ந்த ‘பீட்டா’ ஆங்கில மருந்தை இப்போது பயன்படுத்துகின்றனர். அதைவிட இஞ்சி சிறந்த மருந்தாக உள்ளது.

  இரத்தத்தை இதயம் ஒழுங்காக அனுப்ப பயன்படுத்தப்படும் ‘டிஜிடாலிஸ்’ மருந்தை போலவே, இஞ்சியும் இரத்தத்தை ஒழுங்காக இதயத்துக்கு அனுப்புகிறது என்று ஜப்பான் மருத்துவ நிபுணர்கள் சோதனை மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

  பக்கவாத நோய் ஏற்பட காரணமாக இருக்கும் இரத்த உறைதலைத் தடுக்க இஞ்சி மருந்தாக உள்ளது என கார்னல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

  சாதாரண காய்ச்சல் இருந்தாலும், இருமலுக்கும் கூட இஞ்சியை மருந்தாக பயன்படுத்தலாம் என ஜப்பான் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சிபாரிசு செய்துள்ளது.

  இவ்வளவு மருத்துவசக்தி வாய்ந்த இஞ்சியைப் பற்றிய அதிசய உண்மைகள் இப்போதுதான் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் திருக்குர்ஆனில் இஞ்சியின் சிறப்பை அன்றே எடுத்துக் கூறி இருப்பதைக் கண்டு நமக்கு அதிசயமாக உள்ளது.

  உணவில் நாம் தினமும் இஞ்சியை சேர்த்துக் கொண்டால் எந்த நோயும் அணுகாது. நீண்ட ஆயுள் வாழலாம். அவரவர் விருப்பப்படி இஞ்சியை பயன்படுத்திக் கொள்ள பயனுள்ள மருத்துவ குறிப்புகள் இங்கே உங்களுக்கு தருகிறேன்.

  இஞ்சியை பொடி செய்து, டீ க்கு பதிலாக இஞ்சி டீ கூட குடிக்கலாம் என வெளிநாட்டு டாக்டர்கள் கூறியுள்ளனர். இப்போது இஞ்சியிலிருந்து சாறு, இஞ்சி சர்பத், லேகியம், இஞ்சி தைலம் ஆகிய மருந்துகள் செய்யப்படுகிறது.

  பசியை உண்டாக்கும் இஞ்சி சாறு

  இஞ்சியை மேல்தோல் நீக்கி அரைத்து, நீர் கலந்து வடிகட்டிப் பயன்படுத்துவதே இஞ்சிசாறு எனப்படும். உணவு செரிமானமில்லாமல் ஏற்படும் வயிற்று போக்கிற்கு இஞ்சி சாற்றை வயிற்றின் தொப்புள் பகுதியை சுற்றி தடவி வர குணமாகும்.

  இஞ்சி சாறும், வெங்காய சாறும் சம எடை கலந்து குடித்தால், வாந்தி, குமட்டல் இவைகளை நிறுத்தலாம்.

  இருமல் குணமாகும்
  இஞ்சி சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் சம அளவு கலந்து வேளைக்கு 30 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால், இருமல் விரைவில் குணமாகும்.

  உடல் வலிமைக்கு இஞ்சி தேன் ஒரு காயகற்பம்
  இஞ்சியை கீற்றுக்களாக நறுக்கி, தேனில் ஊற வைத்து நாள்தோறும் காலையில் 4 துண்டு மாலை 4 துண்டு உண்டுவர உடல் பலம் பெறும். இளமை தோற்றம் கொடுக்கும்.

  வயிற்று வலி, வாந்தி நீங்க இஞ்சி

  இஞ்சி சாறு, தேன் இரண்டையும் சேர்த்து பாகு செய்து குங்குமப் பூ, ஏலக்காய், சாதிக்காய், கிராம்பு இவற்றை பொடி செய்து தூவி, கிளறி எடுத்து கண்ணாடி பாத்திரத்தில் வைத்துக் கொண்டு தேவையான போது 5 கிராம் எடுத்து சாப்பிட வயிற்று வலி, வாந்தி முதலியவைகள் குணமடையும்.

  உடல் நலம் காக்க இஞ்சி குடிநீர்

  இஞ்சி, திரிகடுகு (சுக்கு, மிளகு, திப்பிலி) ஏலம், அதிமதுரம், சீரகம், சந்தனத்தூள் ஆகியவை சுலபமாக மருந்து கடைகளில் கிடைக்கின்றன. எல்லாவற்றிலும் வகைக்கு சமஎடை அளவு வாங்கி, அரைத்து கலந்து வைத்துக் கொள்ளவும். வேண்டும்போது 1 ஸ்பூன் பொடியை நீரில் கலக்கி சுண்டக் காய்ச்சவும். பின்பு காலை மதியம் மாலை 50 மில்லி அளவு வேளைக்கு ஒருமுறை சாப்பிட பித்தம் நீங்கும். உடல் சுறுசுறுப்படையும்.

  வாத நோய்களை குணமாக்கும் இஞ்சி எண்ணெய்

  இஞ்சி, சிவதை, சீந்தில், நிலவாகை, கொடிவேலி, கழற்சிக் கொடி, முடக்கத்தான், சமூலம், பூண்டு, சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து அரைத்து 500 மி.லி நெய்யில் கலக்கி காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு வேளைக்கு 1 ஸ்பூன் அளவு உள்ளுக்கு சாப்பிட்டு வர வாத நோய் குணமாகும்.

  தலைவலிக்கு இஞ்சி

  இஞ்சி சாறு ஓரிரு சொட்டுக்கள் மூக்கில் துளியாக விட்டால் தலைவலி குணமாகிவிடும்.

  பல்வலிக்கு இஞ்சி

  இஞ்சி துண்டை பல் வலியுள்ள இடத்தில் வைத்து தேய்த்தால் வலி மட்டுப்படும்.
   தொந்தி குறைய இஞ்சி சாறும், தேனும்.

  வயிற்றில் சதை அதிகமாவதால் தொந்தி விழுகிறது. அதை குறைத்தால் இதயநோய் வராது. தொந்தி இருக்கும் சிலருக்கு குறட்டை அதிகம் ஏற்படும். இதற்கு தொந்தி ஒரு முக்கிய காரணம். பெண்களுக்கு அதிகமாக இந்த வயிற்று சதை பிரச்சனை இருக்கிறது. குழந்தையின்மைக்கு ஒரு காரணமாக கருதப்படும் தொந்தியை குறைக்க இஞ்சி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டாகும்.

  செய்முறை!!!

  500 கிராம் இஞ்சியை தோல் நீக்கி இடித்து சாறு பிழிந்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சிறு தீயிட்டு எரிக்கவும். சுண்டியதும் இறக்கிவிடவும். சாறு எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவுக்கு தேன் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து சிறு தீயாக ஒரு நிமிடம் எரித்து இறக்கி பத்திரத்தப்படுத்தவும்.

  சாப்பிடும் முறை

  காலை சாப்பாட்டுக்கு அரைமணி நேரத்துக்கு முன்பும், மாலை 6 மணிக்கும் ஒரு மேசைக்கரண்டி அளவு 40 நாட்கள் தொடர்ந்து உட்கொண்டால் தொந்தி குறையும். அத்துடன் உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் அவசியம். பகல் தூக்கத்தை தவிர்ப்பது நல்லது.

  குறிப்பு : சாப்பிடும் சமயம் சிலருக்கு உஷ்ணமாக வயிற்று போக்கு ஆகலாம். அப்படிப்பட்டவர்கள் இஞ்சி மருந்து அளவை மிக குறைவாக சாப்பிடுவது நல்லது.

  மஞ்சள் காமாலை ஆஸ்துமாவுக்கு இஞ்சி ஜூஸ்!!!

  நான்கு டீஸ்பூன் அளவுள்ள இஞ்சி சாறுடன் சிறுது உப்பு மற்றும் சில துளிகள் எலுமிச்சம் சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து அருந்துவது இஞ்சி ஜூஸ் ஆகும். இது மஞ்சள் காமாலை ஆஸ்துமா சளி இவற்றை நீக்க வல்லது.

  புற்று நோயிலிருந்து பாதுகாப்பு

  தொடர்ந்து மேற்சொன்ன இஞ்சி ஜூஸ் தினமும் அருந்துபவர்களுக்கு நாக்கு, தொண்டையில் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதாக கண்டுபிடித்துள்ளார்கள்.

  உடல் பலத்திற்கு இஞ்சி லேகியம்
  தேவையான மூலிகை பொருட்கள்
  (மூலிகை மருந்து கடைகளில் கிடைக்கும்)
  இஞ்சி சாறு 1 லிட்டர், மிளகு 25 கிராம், பூண்டு 25 கிராம், வெந்தயம் 25 கிராம், அதிமதுரம் 25 கிராம், ஏல அரிசி 25 கிராம், ஓமம் 25 கிராம், சர்க்கரை 1175 கிராம், நெய் 300 கிராம்.

  மேற்கண்ட மருந்துகளை மூலிகை மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி இடித்து பிழிந்து வடிகட்டி மண்சட்டியில் மூடி வைத்துக் கொள்ளவும். வெள்ளைப் பூண்டை தோல் உரித்து, பசும்பாலில் அவித்து பின்பு அரைத்துக் கொள்ளவும். மிளகு, ஜீரகம், ஓமம் இவைகளை இடித்து மண்சட்டியில் போட்டு இளம் வறுவலாக வறுத்து இடித்து சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ளவும்.

  வெந்தயத்தை நீரில் கழுவி வெயிலில் காய வைத்து பொடியாக்கிக் கொள்ளவும். அதிமதுரத்தை பொடியாக்கிக் கொள்ளவும். சர்க்கரையை 250 மி.லி பசும்பாலை ஊற்றி சட்டியில் வைத்து காய்ச்சவும். இளகியவுடன் இஞ்சி சாற்றை ஊற்றி நன்றாக கிண்டி விட்டு, மற்ற மருந்து பொருட்களை போட்டு இளகல் பதத்தில் இறக்கி, நெய் ஊற்றி கிண்டி உடன் வேறு பாத்திரத்தில் வைக்கவும். மருந்தின் காரம் அதிகமாக இருந்தால் மொத்த மருந்தில் மேலும் 150 மி.லி நெய் சேர்த்துக் கொள்ளவும்.

  சாப்பிடும் முறை
  காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட வயிறு சம்மந்தமான நோய்கள் அனைத்தும் அகலும். உடலும் பலம் பெறும்.

  பசியை கொடுக்கும் இஞ்சி

  இஞ்சியை கழுவி மேல்தோலை எடுத்துவிட்டு வில்லைகளாக நறுக்கி உலர வைத்துவிட வேண்டும். பின்பு எலுமிச்சம் பழச்சாற்றில் தேவையான அளவு இந்துப்பு போட்டு, இஞ்சித்துண்டுகளைக் கலந்து ஊற வைக்க வேண்டும். இவற்றை வெயிலில் உலர்த்தி கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொண்டு காலையில் ஓரிரு துண்டுகள் சாப்பிட்டு வரலாம். இதனால் பலவகையான நோய்கள் குணமடைவதுடன், புளி ஏப்பம், வாந்தி, மயக்கம், வயிறு உப்புசம், அஜீரணம் நீங்கும்.

  திருக்குர்ஆனை குறிப்பிட்ட இஞ்சியின் மருத்துவத்தை இன்று மருத்துவ விஞ்ஞானிகள் உணர்ந்து விட்டனர். மனிதனின் உயிர் காக்கும் இஞ்சி மருத்துவம் சிறந்த இடம் பெறுகிறது என்பதை யார்தான் மறுக்க முடியும்.