08 ஜூலை 2014

புற்றுநோய் முதல் தொற்றுநோய் வரை...

வரும்முன் காக்கலாம் வராமலே தவிர்க்கலாம்
''கடவுளே... இந்த வயசுல எனக்கு மார்பகப் புற்றுநோய் வரணுமா?'' என்று அடையாறைச் சேர்ந்த 86 வயது சாரதாப் பாட்டியின் வேதனை, மனதைப் பிசைகிறது.
14 வயதுகூட நிரம்பாத ஷாலினிக்கு, லேசாகக் காய்ச்சல். ஒரு வாரம் விட்டுவிட்டு வர, எல்லாப் பரிசோதனைகளும் எடுத்துப் பார்க்கப்பட்டன. கடைசியில், குழந்தைக்கு, 'ரத்தப் புற்றுநோய்’ என்று பரிசோதனைகள் உறுதிப்படுத்த... உற்சாகமாகத் துள்ளித்திரிந்த சிறுமி, இன்று மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

விஞ்ஞானம் வளர்ந்துகொண்டே இருந்தாலும் புற்றுநோய் ஏன் வருகிறது? எதனால் வருகிறது? எந்த வயதில் தாக்கும் என்று சொல்லக்கூட முடியாத நிலைதான் இன்று நீடிக்கிறது.
ஆண்டாண்டு காலமாக நாம் சாப்பிட்டு வந்த பாரம்பரிய உணவுப்பழக்கத்திலிருந்து மாறியதன் விளைவுதான், புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்கள் தாக்கம் அதிகரித்ததற்கான ஆணிவேர். அதிலும், இந்தியாவில் எட்டிக்கூடப் பார்க்காத குடல் புற்றுநோய்களும் தற்போதுள்ள உணவுப்பழக்கத்தினால் மிக அதிகமாகிவிட்டன. 'வரும் முன் காக்கவும், வந்த பின் கடைப்பிடிக்கவும் புற்றுநோயைப் புறந்தள்ளும் ஆரோக்கிய உணவுகளைப்பற்றி, சித்த மருத்துவர் சிவராமனிடம் கேட்டோம்.  
''புற்றுநோயில் நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. புற்றுநோய்க்கு நவீன சிகிச்சைகள், மருந்துகள் வந்துவிட்டாலும், அதற்கான விழிப்பு உணர்வு, மக்கள் மத்தியில் மிகமிகக் குறைவாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக, இதைத் தீர்க்க முடியாத வியாதியாகவே பலரும் எண்ணுகின்றனர். புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறி யும்பட்சத்தில், குணப்படுத்துவது சாத்தியம். எளிய உணவுப்பழக்கத்தின் மூலமே இந்தக் கொடிய நோயை வராமல் தடுத்துவிட முடியும். வந்தாலும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்தியும் விடலாம். நம்முடைய உடலில் தினமும் புற்றுநோய் செல்கள் உருவாகின்றன. இதை நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி ஆரம்பத்திலேயே கண்டறிந்து அழித்துவிடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போதுதான், இந்தப் புற்றுநோய் செல் வளர்ச்சியடைந்து மற்ற உறுப்புகளையும் பாதிக்கிறது. மருத்துவக் குணம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம், உடல் ஆரோக்கியம் காப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யலாம்'' என்கிற சிவராமன், உணவுகளைப் பட்டியலிடுகிறார்.
அடர்நிறப் பழங்கள்
அடர் நிறப் பழங்களில் ஃப்ரீ ராடிகல்சை (Free radicals) வெளியேற்றும் ஆற்றல் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக சிவப்பு, நீலம், பர்ப்பிள் நிறப் பழங்களில் 'அந்தோசைனின்’ (Anthocyanin) என்ற நிறமிச் சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலில் புற்றுநோயை வரவிடாமல் தடுக்கும்.
பெரிய நெல்லிக்காய், நாவல் பழம், சீதாப் பழத்தின் ஒரு வகையான ராம் சீதா போன்ற பழங்கள், புற்றுநோயைத் தடுக்கவல்ல பழங்கள் என்று ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
சிட்ரஸ் பழங்களில் நார்ச் சத்து, தாது உப்புக்கள், வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும்.
கருப்புத் திராட்சை, மாதுளை, செர்ரி, மாம்பழம், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
காய்கறிகள்
சிவப்புத் தக்காளி, கேரட், கரும்பச்சை இலைகளைக்கொண்ட காய்கறிகள், சில கீரை வகைகள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்வதுடன், புற்றுநோயிலிருந்து நம்மைக் காக்கும்.
நம் உடலில் உள்ள வைட்டமின் குறைபாட்டுக்கும், புற்றுநோய் செல்களின் பெருக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வைட்டமின் ஏ சத்தில் உள்ள அதிகமான 'ரெட்டினாயிக் அமிலம்’ புற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவருகிறது.  
தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி,  புற்றுநோயைத் தடுக்கும் 'லைகோபைன்’ (Lycopene) என்ற ஆன்டிஆக்சிடென்ட் இருப்பதால், புற்றுநோயால் செல்கள் பாதிப்படைவதைத் தடுக்கும்.
காலிஃப்ளவர், ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் போன்றவற்றில் இன்டோல் 3 கார்பினால் (மிஸீபீஷீறீமீ 3 நீணீக்ஷீதீவீஸீஷீறீ) அதிகம் இருப்பதால், இந்தக் காய்கறிகள் சில வகை புற்றுநோய்களை உண்டாக்கும் செல்களை அழிக்கின்றன.
காளானை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எலும்புகள் வலுவடையும்.
மணமூட்டிகள்
இதில், மஞ்சள் தூளுக்குத்தான் முதல் இடம். இதில் உள்ள மூலக்கூறுகள் பக்கவிளைவுகள் ஏதும் இல்லாமல், புற்றுநோய் செல்லின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
லவங்கப்பட்டை, கறிவேப்பிலை, அன்னாசிப்பூ, கருஞ்சீரகம், பூண்டு, கொத்துமல்லி விதை, வெந்தயம், இஞ்சி, மிளகு போன்றவை புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கக்கூடிய ஆற்றல் கொண்டவை. இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பூண்டில் இருக்கும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடென்ட், டியூமர் செல்களை அழிப்பதுடன், புற்றுநோயை எதிர்த்துப் போராடி உடலைப் பாதுகாக்கும்.
உணவுகள்
க்ரீன் டீயில் மிக அதிகமாக ஆன்டிஆக்சிடென்ட் கொழுப்பைக் கரைக்க வல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும். தினமும் க்ரீன் டீயைக் குடிக்கலாம்.  
நட்ஸ் வகைகளில் வால்நட், ஃப்ளாக்ஸ் சீட்ஸில் ஒமேகா -3 இருப்பதால் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் ஆன்ட்டிஆக்சிடென்ட் இருப்பதால், புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுக்கும்.
சித்த மருத்துவத்தில் ஆடாதொடை இலை, தேராங்கொட்டை, நீரடி முத்து, வல்லாதகி போன்ற மூலிகைகள் புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படக்கூடியவை. ரத்தத்தட்டுக்களை உயர்த்தக்கூடியவை. வீரியமிக்கது என்பதால், மருத்துவ ஆலோசனை பெற்று பயன்படுத்த வேண்டும். மேலும், புற்றுநோய் வராமல் தடுக்கும் வேதிப்பொருளான, 'டாக்சால்’ தாளித்தபத்ரி மூலிகை மரத்திலிருந்துதான் எடுக்கப்படுகிறது.
புற்றுநோயைக் கண்டு பதட்டமடையத் தேவை இல்லை. இன்று நவீன மருத்துவ சிகிச்சை முறைகளும் வந்துவிட்டன. இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, முறையான மருத்துவ சிகிச்சைபெற்று முழுமையாகக் குணம் அடைய முடியும். அதிலும், இயற்கையான உணவு, காய்கறி, பழங்களைச் சேர்த்துக்கொள்வதன் மூலம், உடலுக்குள் புற்றீசல்போல் பரவிவரும் புற்று நோயையே வேரறுத்துவிடலாம்'' என்கிறார் டாக்டர் சிவராமன்.
எந்த நோயும் நம்மை நெருங்காமல் இருக்க, உணவில் கூடுதல் கவனம் அவசியம் தேவை!
- ரேவதி,
படங்கள்: ர.சதானந்த், அ.ஜெஃப்ரிதேவ்,
மாடல்கள்: திவ்யதர்ஷினி, நிரஞ்சனா
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும் உணவுகளைப்பற்றி விவரிக்கிறார் சீஃப் டயட் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி.
''மேலை நாடுகளில் மட்டுமே அதிகம் இருந்த புற்றுநோய்கள் இப்போது இந்தியாவில் பெருகிவருகின்றன. வெளிநாட்டினர் காய்கறி, கீரைகள், தானியங்கள் கொண்ட சாலட் வகை சத்தான உணவை அன்றாடம் எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், இங்கோ பர்கர், பீட்சா, ஜங்க் ஃபுட்ஸ் என நார்ச் சத்து இல்லாத கடின உணவுகளையே விரும்பிச் சாப்பிடுகின்றனர். அதிலும்,பெரும்பாலான கடைகளில், காய்ந்த சிவப்பு மிளகாய் வற்றலை அரைத்துத் தூவிப் பயன்படுத்துவதால், நேரடியாக புற்றுநோய்க்கு சிவப்புக் கம்பளமிட்டு வரவேற்கிறோம். மேலும் கோஸ், பீன்ஸ், கேரட் பொரியலில்கூட வெள்ளையாகவும், பச்சை நிறம் மாறாமலும் இருக்க வேண்டும் என்பதற்காக மஞ்சள் சேர்ப்பது இல்லை. உடல்நலத்துக்குக் கேடுவிளைவிக்கும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகளை அதிகம் பயன்படுத்துகிறோம். இது உடல் நலத்துக்கு மிகவும் கேடு  விளைவிக்கக்கூடியது. இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
பருப்பை வேகவிடும்போது, சிட்டிகை மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் வெந்தயம், சிறிது மிளகு, சீரகம் சேர்த்தே வேகவிடலாம். இதனால் ஒருநாள் வரை பருப்பு கெடாமல் இருக்கும். உடலில் சத்துக்களும் சேரும். காய்கறிகள், கூட்டு, சாம்பார் என எல்லாவற்றிலும் மஞ்சள்தூளைச் சேருங்கள்.
நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு நார்ச் சத்து 20 முதல் 40 கிராம் தேவை. பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள் அன்றாடம் சாப்பிடுவதன் மூலம், 'இன்டஸ்டினல் கேன்சர்’ வராமல் தடுக்கலாம்.
உணவில் தினமும் இரண்டு மூன்று வகைத் தானியங்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.  
மூன்று நான்கு வகை வெவ்வேறு நிறப் பழங்களை தினமும் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.    
பிங்க் கலர் முட்டைக்கோஸ், வெள்ளை நிற வெங்காயம் மிகவும் நல்லது. தினமும் உணவில் வெங்காயம் சேருங்கள். கோஸை பொரியலாகவோ கூட்டாகவோ செய்து சாப்பிடலாம்.  
தினமும் தக்காளி சேர்த்து ரசம், சாம்பார் செய்யுங்கள். தக்காளித் தொக்காகவும் செய்து சாதத்துடன் சாப்பிடலாம்.  
காரம் தேவையெனில் மிளகாய் சேர்ப்பதைத் தவிர்த்து, மிளகு சேர்த்துக்கொள்ளலாம். உடலுக்கும் நல்லது.

நன்றி : டாக்டர் விகடன்

1 கருத்து:

  1. மருத்துவத்தடாகம்
    உடலை வளர்த்தேன்..உயிர் வளர்த்தேன் = புற்றுநோய் முதல் தொற்றுநோய் வரை...
    வரும்முன் காக்கலாம் வராமலே தவிர்க்கலாம் = நன்றி : டாக்டர் விகடன் = இடுகையிட்டது J Mohaideen Batcha = அருமையான, சற்று பெரிய பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். நன்றி திரு J Mohaideen Batcha

    பதிலளிநீக்கு