10 மார்ச் 2012

நீயும் அவனும் வேறு......

தன்னை பிறரோடு பொருத்தி பார்த்து அவனை போல நான் இல்லையே என்று ஏங்குபவர்கள் பலருண்டு, அப்படி ஏங்க ஆரம்பித்தால் எவளவோ ஏங்க வேண்டியிருக்கும், அவன் செல்வந்தருக்கு பிறந்தவன் நான் ஏன் ஏழையாக பிறந்தேன், அவனை சுற்றி எப்போதும் நாலுபேர் இருக்கிறார்கள், என்னை கண்டால் நாய் கூட விலகி ஓடுகிறது, அவன் கெட்டதை செய்தாலும் மதிக்கப் படுகிறான், நான் நல்லதை செய்தாலும் துரத்தப் படுகிறேன், இப்படி சில விஷயங்களை பிறரோடு பொருத்தி பார்க்காமல் இருக்க முடியாதுதான்

ஆனால் நாம் நினைக்க வேண்டியது என்ன, நமக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை நாம் எப்படி சிறப்பாக வாழ்வது, நம்மிடமுள்ள தனித்துவம் என்ன, அதை எப்படி உலகிற்கு காட்டுவது, அவனை போல நான் இல்லையென்றால் நான் தனித்துவமானவன், என்பதை உணர்ந்து அதை நிரூபித்துக் காட்ட வேண்டும், பிறரை ஒப்பீடு செய்து கொண்டிருந்தால் நம்மை எப்படி நிரூபிக்க முடியும், பிறரின் பாதைகளை பார்த்துக் கொண்டிருந்தால் நம் பாதைகள் தவறி விடும்.

அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், தங்க தட்டில் சாப்பிட்டு, பட்டு கம்பளத்தில் உறங்கிக் கொண்டிருக்கட்டும், அதையெல்லாம் அசைபோட்டுக் கொண்டிருப்பது நம் வேலையல்ல, தரையில் படுத்துறங்கி, கரடு முரடான பாதைகளில் சென்று கொண்டிருந்தாலும், நம் வழிகளிலிருக்கும் தனி சந்தோஷங்களை உணர்ந்து, நமக்குரிய இலக்கை நோக்கி நடப்போம், உலகம் எவளவு மாறிக் கொண்டிருந்தாலும் அவைகளையும் ஏற்றுக்கொண்டு நம்மை இவ்வுலகிற்கு வெளிப்படுத்த முடியும்

பிறரிடம் இருக்கும் திறமை நம்மிடம் இல்லாமலிருக்கலாம், பிறருக்கு அமைந்த வாழ்க்கை நமக்கு அமையாமலிருக்கலாம், ஆனால் அவர்களே வாய் பிளக்கும் அளவிற்கு ஒரு தனித்துவமான வாழ்க்கை கோட்டையை கட்டக்கூடிய, செங்கல், மணல், சிமெண்ட், கம்பிகள் என்று அனைத்தும் நம்மிடமே இருக்கிறது, அதை முறையாக எடுத்து நம்மால் கையாள முடியும், அதற்கு நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது பிறருடைய வழியை அல்ல, நம்முடைய வழியை, அதுதான் நம் திறமையை வெளிக்கொண்டு வரும்.

வெற்றி உனக்கா, எனக்கா. அவமானப் படுவது நீயா, நானா இப்படி தேவையில்லாமல் அடுத்தவனை நினைத்து வசைபாடிக் கொண்டிருந்தால் பல ஏமாற்றங்களை சந்திக்க வேண்யதிருக்கும், ஏனெனில் அவன் திறமைக்கு ஒருவித வெற்றியும், நம் திறமைக்கு வேறு ஒரு வெற்றியும் கிடைக்கும், நாம் வேகமாக சைக்கிள் ஓட்டி பரிசு வென்றோமானால், அவன் சிலோறைஸ் போட்டியில் வென்று விடுவான், எனவே எதிலும் நீயா நானா என்ற பேச்சுக்கே இடமில்லை

பல்வேறு மனிதர்களுக்கு பல்வேறு வரங்களை கொடுத்து, செருப்பு தைப்பவன், ரோடு போடுகிறவன், ராக்கெட் தயாரிப்பவர், மருத்துவம் பார்ப்பவர் என்று வெவ்வேறு வித வரங்களை கொடுத்தால்தான், உலகம் முறையாக இயங்கும் என்பது இறைவன் வகுத்த நெறி, இதில் நம் வரங்களை, நமக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சரியாக செய்து முடிப்பதே நமது கடமையாகும், பிறரை ஒப்பிடுவது அல்லது தாழ்வாக நினைப்பது இறைவனை மட்டம் தட்டுவதாகும்

உலகத்தைதான் இறைவன் இயக்குகிறான் ஆனால் நம் வாழ்க்கையை இயக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது, நாம் பிறர் வாழ்க்கையில் தலையிடாமல் நம்மை பற்றி சிந்திக்க ஆரம்பிப்போம், நம்மை கற்றுக்கொள்ள துவங்குவோம், நம் சுய ரூபத்தை உலகிற்கு கொண்டு வருவோம், நமெக்கென்று ஒரு பாணியை வகுத்து, நம்மை மாற்றிக் காட்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக