07 மார்ச் 2012

மன அழுத்தமா?

மன அழுத்தமானது மூளையின் ஆற்றலைக் குறையச் செய்து அல்லது பழுதடையச்செய்து அதனால் சிந்திக்கவோ, செயப்படவோ முடியாமல் செய்துவிடுகிறது. டல்லாக இருக்கும் ஒருவரைப் பார்த்து கேட்டாலே மனசு சரியில்லை என்றுதான் கூறுவார்கள். மனதிற்கும் அழகிற்கும் அத்தனை தொடர்புள்ளது. மனது நன்றாக இருந்தாலே முகத்தில் வசீகரம் தோன்றும் புன்னகை தவழும், அழகும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். எனவே மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க நன்றாக குளிக்க வேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள். உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க அதுவே வழி என்கின்றனர்.

எண்ணெய் மசாஜ்

‘சனி நீராடு’ என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்துள்ளனர். அதன் காரணம் சனிக்கிழமை மட்டுமே குளிப்பது இல்லை. வாரம் ஒருநாள் உடல் முழுக்க எண்ணெய் தேய்த்து நன்றாக குளிர, குளிர குளிக்க வேண்டும் என்பதுதான். இதனால் உடலில் உள்ள சூடு குறையும், உடலும் மனமும் குளிர்ச்சியடையும்.

எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் உடம்பில் சேரும் விஷத்தன்மை நீங்கும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் உடல் வாகிற்கு தகுந்தவாறு அதற்கேற்ப எண்ணெய்களை தேய்த்து குளிக்க வேண்டும். தினமும் லேசாக எண்ணெய் தேய்த்து குளிப்பது நன்மை தரும் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் சருமநோய்கள் மறையும், உடல் மெருகு கூடும். புத்துணர்ச்சி ஏற்படுவதோடு, உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

இயற்கை மூலிகைகள்

குளிப்பதற்கு பயன்படுத்தப்படும் சோப்பு, ரசாயன கலப்பு கொண்டது. அதுபோல தலைக்கு தேய்க்கப் பயன்படுத்தப்படும் ஷாம்புவும் எண்ணற்ற ரசாயனங்களை கொண்டுள்ளது. அதற்குப் பதிலாக தேன், பால் கற்றாழைச் சாறு கலந்த கலவையை உடலில் தேய்த்துக்கு குளிக்கலாம். இது உடம்பில் உள்ள அழுக்கை நீக்குவதோடு அழகும், புத்துணர்ச்சியும் தரும். இந்தக் கலவையை பயன்படுத்த முடியாதவர்கள், சிறுபயறு, கடலைமாவு, தேன் கலந்து குளித்தால் சருமம் மெருகேரும். இதனால் மனஅழுத்தம் குறையும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

பொடுகு நீக்குங்கள்

மன அழுத்தம் தலையையும், தலைமுடியையும், அதிகம் பாதிக்கும். பொடுகு தோன்றி தலை அரிப்பு எடுக்க தொடங்கிவிடும். இதற்கு காரணம் மன அழுத்தமே என்கின்றனர் மருத்துவர்கள். எனவே நாம் தினமும் குளிப்பதைப்போலவே நாம் பயன்படுத்தும், சீப்பு, டவல் போன்றவற்றையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். வாரம் ஒருமுறையாவது சுடுநீரில் போட்டு அவற்றை அலசவேண்டும். இதனால் பொடுகு ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

சத்தானதா சாப்பிடுங்க

மனச்சிக்கலால் மலச்சிக்கல் ஏற்படும். இதுவும் ஆரோக்கியம், அழகு குறைவுக்கு காரணமாகும். எனவே நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும், கீரைகள், பழங்களையும் உட்கொள்ள வேண்டும். புடலங்காய், பீர்க்கங்காய், போன்ற காய்கறிகள் அதிக நார்ச்சத்து மிக்கவையாகும். இதனால் உடல் வனப்பு கூடுவதோடு, சருமம் பளபளப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக